General08 August 2026

பல்லன்சேன சிறைச்சாலை சொத்துகளுக்கு சேதமில்லை - சிறைச்சாலைகள் திணைக்களம்

நீர்கொழும்பு, தளுபொத - பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறைச்சாலையின் கட்டடங்கள் அல்லது ஏனைய அரச சொத்துகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (7) நள்ளிரவு 12 மணியளவில் சிறைச்சாலை வளாகத்தின் நிலைமை முற்றாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதுடன், பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மேலதிக பாதுகாப்புப் பிரிவினர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (8) காலை வேளையில் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் வழமை போல் சிறைச்சாலைக்கு வருகை தந்ததுடன், கைதிகளைச் சந்திப்பதற்கு தேவையான வசதிகளையும் அனுமதியையும் சிறைச்சாலை நிர்வாகம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, சிறைச்சாலையின் அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக 78 கைதிகள் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்களில் 28 கைதிகள் மேலதிக மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes