International12 August 2026

ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்மக் கோயில்! மாலை 6 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன?

இந்தியாவில் பல அதிசயங்களும் நூற்றாண்டுகள் கடந்த வரலாறும் கொண்ட ஆன்மீகத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிகோனியாவில் அமைந்துள்ள 'கக்கன்மாத் சிவன் கோயில்' ஆராய்ச்சியாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு மர்மக் கோயிலாகக் காட்சி அளிக்கிறது.

பொதுவாக எந்தவொரு பெரிய கட்டமைப்பும் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதற்கு நடுவில் சிமெண்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற கலவைகளைக் கொண்டு பூசித் தான் கட்டப்படும். ஆனால், இந்தக் கோயில் எந்தவிதமான பசையோ, சிமெண்டோ இல்லாமல் வெறும் கற்களை மட்டும் கொண்டு சுமார் 115 அடி உயரத்தில் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

எந்தவித இணைப்புக் கலவையும் இல்லாமல் கட்டப்பட்டிருந்தாலும், இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளைக் கடந்து பல்வேறு வெள்ளம், புயல், காற்று மற்றும் நிலநடுக்கங்களைச் சந்தித்து இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. அருகில் இருந்த பல கட்டிடங்கள் அழிந்துவிட்ட போதிலும், இந்தக் கோயில் உறுதியாக நிற்பதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டறிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்தக் கோயில் உருவாக்கம் குறித்து இரண்டு விதமான தகவல்கள் நிலவுகின்றன:

11-ஆம் நூற்றாண்டில் கச்சபகத வம்சத்தைச் சேர்ந்த மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதி, தீவிர சிவபக்தையாக இருந்ததாகவும், இவரது வேண்டுகோளின்படியே இந்த பிரம்மாண்ட சிவன் கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

மறுபுறம், சிவபெருமானின் கட்டளைப்படி பேய்களும் பூதங்களும் சேர்ந்து அசுர பலத்துடன் ஒரே இரவில் இந்தக் கோயிலைக் கட்டியதாக இந்தப் பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

அதிகாலை நெருங்கியதும் பேய்களுக்குரிய சக்தி குறைந்துவிடும் என்பதால், பாதியில் வேலைகளை அரைகுறையாக விட்டுவிட்டு அவை மறைந்துவிட்டதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன.

பல்வேறு மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த இந்தக் கோயில், தினமும் காலை 6 மணிக்குத் திறக்கப்பட்டு சரியாக மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் தொடரும் மர்மங்கள் காரணமாக, அதற்குமேல் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தக் கோயிலைச் முழுமையாகச் சுற்றிப் பார்த்து அதன் அழகை அனுபவிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும்.
Related recommendation
Hiru TV News | Programmes