General15 August 2026

“அரசியல்வாதிகளுக்கு பயம்!” – சிறைச்சாலை மோதல்கள் குறித்து பிரதீப் அதிரடி தகவல்

கடந்த காலத்தில் வான் மற்றும் கடல் வழியாகக் கிலோ கணக்கில் பெருமளவு போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கு, அப்போதைய அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளின் மறைமுக ஆதரவும் அனுசரணையும் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால், விசாரணைகளில் தங்களது பெயர்கள் தெரிந்துவிடுமோ என்ற பயத்திலேயே அரசியல்வாதிகள் சிறைச்சாலை மோதல்களையும் கலவரங்களையும் பின்னணியில் இருந்து தூண்டிவிடுகின்றனர்.

கடந்த காலத்தில் சிறைச்சாலைகளுக்குள்ளிருந்தே போதைப்பொருள் வியாபாரம் தடையின்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய ஆட்சியின்கீழ் அது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய, நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளும் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சதித்திட்டங்களைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எந்தக் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தாலும் இந்த அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes