General17 August 2026

22 ஆவது திருத்தத்தின் பின்னர் மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை நடத்தத் திட்டம்!

அரசியலமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தம் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பின்னர், மாகாண மட்டத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வழமையாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பிலேயே தனது நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி வருகின்ற போதிலும், மாகாண மட்டத்தில் நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

இதற்கு நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதால், 22 ஆவது திருத்த வரைவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தும் ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக 4 நீதியரசர்கள் சேர்க்கப்படுவதன் மூலம், சில மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகள் ஒரு வருடம் வரை தொடரக்கூடும் என்றும், சில மாகாணங்களில் காலவரையறையின்றி நடைபெறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே இந்த அமர்வுகளின் கால அளவு தீர்மானிக்கப்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதையும், உச்ச நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலமும் (18) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes