General17 August 2026

சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு


கடந்த சனிக்கிழமை சூரியனின் "விழுதுகள்” நிகழ்ச்சியில் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துக் கொண்டு இலங்கையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் ஆலய நிர்வாகங்களுக்கு இடையே காணப்படும் பிளவுகளைத் தவிர்த்து, இந்துக்களை ஒன்றிணைக்கும் வலுவான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஏனைய மதங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது முடிவுகளை எடுப்பதற்கு மதப் பீடங்களும் ஒருங்கிணைந்த தலைமைத்துவமும் காணப்படுவதைப் போன்று, இந்து சமயத்திலும் அனைத்து பேதங்களையும் கடந்து ஒன்றிணையக்கூடிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் விழுதுகள் நிகழ்ச்சியை மேற்கோள் காட்டிஇலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமயத்தில் செயற்பட்டு வருகின்ற அனைவரும் ஒருங்கிணைந்து, பரஸ்பர ஒத்துழைப்புடன் ஒரு முறையான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு திறந்த அழைப்பை விடுத்திருந்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்து, எமது நீண்டகால நிலைப்பாட்டுடனும் முயற்சிகளுடனும் ஒத்துப்போகின்ற ஒரு முக்கியமான அழைப்பாக நாம் கருதுகின்றோம்.

இந்து சமயத்தில் உள்ள குருமார்கள், சமய அறிஞர்கள், குருமார் அமைப்புகள் மற்றும் இந்து சமயத்திற்காக உண்மையாகப் பணியாற்றுகின்ற அனைத்து தரப்பினரும் வேறுபாடுகளைத் தாண்டி, ஒருங்கிணைந்து, ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒரு வலுவான தேசிய கட்டமைப்பு அவசியம் என்ற கருத்தை இதன் மூலம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ள இந்தத் திறந்த அழைப்பை ஒரு அரசியல் அழைப்பாக அல்லாமல், இந்து சமயத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்குமான ஒரு ஆக்கபூர்வமான வாய்ப்பாகவே தாம் பார்ப்பதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



Related recommendation
Hiru TV News | Programmes