General17 August 2026

விரைவில் இலங்கை மக்கள் விருப்பமான வாகனங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்: விஜித ஹேரத் உறுதி!

இலங்கை மக்கள் விரைவில் தமக்குப் பிடித்தமான வாகனங்களைச் சொந்தமாகப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் (CAIA) ஏற்பாடு செய்யப்பட்ட வாகனக் கண்காட்சிப் பேரணியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் வசதியாகத் தங்களது சொந்த வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டு, அன்றாடத் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டிருந்தமையையும், நாட்டிற்குள் எந்தவொரு வாகனத்தையும் கொண்டுவர முடியாத நிலைமை காணப்பட்டமையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

எனினும், குறுகிய காலத்திற்குள் இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதுடன், இன்று கட்டுப்பாடுகள் இன்றி எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக தற்காலிகமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவை குறுகிய காலத்திற்கே நீடிக்கும் என்றும், விரைவில் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மக்களின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிந்தமையினாலேயே, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட முறையிலாவது இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடிந்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

பிரஜைகள் மகிழ்ச்சியாக வாழவும் சுதந்திரமாகப் பயணிக்கவும் விரிவான சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகவும், அந்த மாற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes