General19 August 2026

சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய ஒருங்கிணைந்த பொறிமுறை – நீதியமைச்சர்

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவசர நிலைமைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலை நெருக்கடிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதுடன், கைதிகளின் நலன்புரி மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.

பிரதேச அரச அதிகாரிகளின் தலைமையில் அமைக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த குழுக்கள், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை கூடி நிலவரங்களை ஆராயவுள்ளன.

காவல்துறை, இராணுவம், காவல்துறை விசேட அதிரடிப்படை, நீர் வழங்கல் சபை, மின்சார சபை, சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்புப் பிரிவு உள்ளிட்ட பல துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தப் பொறிமுறையில் இணைக்கப்படவுள்ளன.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக களுத்துறை, காலி, பூஸ்ஸ மற்றும் மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்களது புகார்களைத் தெரிவிப்பதற்குப் புதிய பயனுள்ள முறைமையொன்று உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes