General21 August 2026

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு!

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியர் தாக்கியதில் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை காலை மிகுந்த உற்சாகத்துடன் பாடசாலைக்குச் சென்ற சிறுவன், மதிய வேளையில் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை கூறுகையில், "பாடசாலை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, ஆசிரியர் தடியால் மிரட்டித் தாக்கியது பதிவாகியுள்ளது. அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் அவன் சரிந்து விழுந்துள்ளான்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஆசிரியர் இதுபோன்று ஏனைய மாணவர்களையும் அடித்துத் துன்புறுத்துவதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச கல்வித்துறை, இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, பிராந்திய இணை இயக்குநர் (RJD), மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மற்றும் வருவாய் கோட்ட அதிகாரி (RDO) ஆகியோரைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes