General22 August 2026

யாழில் வாணவேடிக்கையை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்காக வாணவேடிக்கைகளை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பண்டத்தரிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாணவேடிக்கையின்போது கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 21 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கண்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes