General22 August 2026

80,000 வேலைவாய்ப்புகள் எங்கே? போர்ட் சிட்டி திட்டம் குறித்து சாணக்கியன் கேள்வி

போர்ட் சிட்டி எனப்படும் துறைமுக திட்டம் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சாதாரண குடிமகன் ஒருவர் விவசாயம் அல்லது தொழில்முயற்சிக்காக அரசாங்கத்திடம் காணியைக் குத்தகைக்கு பெற்று, 10-15 வருடங்களாக உறுதியளிக்கப்பட்ட திட்டங்களை முன்னெடுக்காவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.

ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.

போர்ட் சிட்டி திட்டம் மூலமாக 80,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் ஈர்க்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நாட்டின் இளைஞர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை தொடர்கிறது.

போர்ட் சிட்டி ஆணைக்குழுவில் உள்ள சில அதிகாரிகளுக்கு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை அதிகளவிலான வேதனம் வழங்கப்படுகிறது.


அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வேதன அளவிற்குக்கூட போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்குப் போதிய வருமானம் கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes