General22 August 2026

வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்

அரச வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று, அவற்றை மீளச் செலுத்தாத நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

சூரியனின் ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பலர் அரச வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று, அவற்றை மீளச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களின் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் வெளியில் வட்டிக்கு பணம் வழங்கும் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, கடன்களை மீளச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியலை கோப் குழு உடனடியாகப் பெற்று, அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்கு கோப் குழு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் பேசப்பட்ட பில்லியன் கணக்கான உகண்டா பணப்பரிமாற்றங்கள், லம்போகினி சொகுசு வாகனங்கள் மற்றும் தங்கக் குதிரைகள் தொடர்பான பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விசாரணைகள் வெறுமனே அரசியல் பிரசாரமாக மட்டுமே நின்றுவிட்டனவா அல்லது அவை தொடர்பான உண்மை நிலவரம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes