International27 August 2026

சமூக வலைதள ரீல்ஸ்களாகும் சட்டசபை நேரலை - எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை குறித்து ஆலோசனை!

தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகள், நேரடி ஒளிபரப்பின் மூலம் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவை நிகழ்வுகளை சுமார் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பும் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் தொடர்பில் பொதுமக்களின் கவனம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் சில கருத்துகள் பின்னர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அவை நேரடி ஒளிபரப்பில் இடம்பெற்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் முறையிட்டதாகவும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளை ஒளிபரப்புவதையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், நேரடி ஒளிபரப்பின்போது அத்தகைய உள்ளடக்கங்கள் இடம்பெறுவதை முழுமையாகத் தடுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளை சுமார் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்புவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு தாமதத்துடன் ஒளிபரப்புவதன் மூலம், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் அவற்றை ஒளிபரப்புக் குழுவினரால் நீக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த நடவடிக்கை தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes