International27 August 2026

தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! திமுக – தவெக உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல்

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களிடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஒருவர், திமுக ஆட்சியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் மற்றும் அம்பேத்கர் அயலகத் திட்டம் உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக ஆட்சியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விமர்சித்தார்.

மேலும், பிற மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசைக் காரணம் காட்டி தப்பிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது பேசிய கோவி செழியன், அண்ணாவின் கருத்தை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியுடன் வருபவர்களைப் போன்றவர்கள் என்றும், ஆளுங்கட்சியினர் எண்ணெயுடன் கூடிய கரண்டியுடன் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த உறுப்பினர் பேசிய ஒரு பகுதியை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கடந்த காலத்தில் திமுகவுக்காக தான் பணியாற்றியதாகக் குறிப்பிட்டார். தனது அரசியல் பங்களிப்பு குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால், அதற்கு தகுந்த பதில் அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, அவையில் உறுப்பினர்களிடையே கடும் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் கருத்து தெரிவித்த சபாநாயகர், எதிர்க்கட்சியினர் வாளுடன் வந்தாலும், ஆளுங்கட்சியினர் கேடயத்தைக் கொண்டு தற்காத்துக்கொள்ள வேண்டும்; பதிலுக்கு வாளைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes