General05 September 2026

சீன பிரஜையின் மர்ம மரணம் - 43 நாட்களுக்குப் பின்னர் பிரதான சந்தேகநபர் கைது

கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் சீன பிரஜையொருவர் கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் 54 வயதுடைய சீன பிரஜையொருவர் மாறுவேடத்தில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் செயற்கை தலைமுடியை அணிந்து மாறுவேடத்தில் இருந்த நிலையில், சம்பவம் இடம்பெற்று 43 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு துறைமுக நகரப் பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சீன பிரஜைகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஹலியகொட காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கரதன காவல் கண்காணிப்பு நிலைய அதிகாரிகள் குழுவொன்று, கடந்த ஜூலை 23ஆம் திகதி கெட்டஹெத்த பகுதியை நோக்கிய வீதிக்கு அருகிலுள்ள ரம்புட்டான் தோட்டமொன்றில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீட்டுக்குள் இருந்து ஒருவரின் உடலத்தை கண்டெடுத்திருந்தது.

குறித்த உடலம் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும், சந்தேகத்திற்கிடமான சொகுசு சிற்றூந்து ஒன்றும் அன்றைய தினம் நுகதண்ட கோவில் அருகிலுள்ள வீதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில் இது திட்டமிடப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர் சீன பிரஜை எனவும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சீன பிரஜை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்குச் சென்றிருந்த இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்துக்குப் பின்னர் சீகிரியா பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த மேலும் இரு சீன பிரஜைகள் கடந்த மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய பிரதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக்காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes