General07 September 2026

அம்பாறை, மட்டக்களப்பில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடும் வீழ்ச்சி: சீயம்பலாண்டுவையில் குழாய் கிணறுகள் திருத்தம்

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 9 பிரதான பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 21.5 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (06) தெரிவித்துள்ளது.

இந்தத் திடீர் நீர்மட்ட வீழ்ச்சியால், மாவட்டத்தில் விவசாயம் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கான நீர் விநியோகம் தொடர்பில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4 பிரதான பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் 25.3 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.

இது கிழக்கு மாகாணத்தில் நீடித்து வரும் கடும் வறட்சியின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது.

தொடர்ந்து நிலவும் வறட்சியான வானிலையால் பல மாவட்டங்களில் நீர்வளமும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்து தற்காலிக நிவாரணம் கிடைத்தபோதிலும், வெப்பமான வறண்ட வானிலை எதிர்வரும் வாரம் முழுவதும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொனராகலையும் ஒன்றாகும்.

அங்குள்ள ஏராளமான சிறிய பாசனக் குளங்கள் ஏற்கனவே முற்றிலும் வற்றிப்போயுள்ளன.

குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில், மொனராகலை - சீயம்பலாண்டுவை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 48 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குழாய் கிணறுகளைத் திருத்தும் பணிகளை, சீயம்பலாண்டுவை பிரதேச சபையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து ஆரம்பித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes