General07 September 2026

பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்- டில்வின் சில்வா எச்சரிக்கை

பொதுப்பணத்தை தவறான முறையில் முறைகேடு செய்தவர்கள், அவர்களின் அரசியல் பின்புலம் எதுவாக இருந்தாலும் நிச்சயம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனமக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய அவர், அரசியல் எதிரிகளை அரசாங்கம் பழிவாங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால் பொதுப்பணத்தைத் திருடியிருந்தால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அதில் நாங்கள் செய்வதற்கு எதுவுமில்லை.

தவறு செய்தவர், முன்னாள் ஜனாதிபதியாகவோ, முன்னாள் அமைச்சராகவோ அல்லது அவர்களின் மகனாகவோ இருந்தாலும் அது பற்றி அரசாங்கத்துக்கு கவலையில்லை.

குற்றம் புரிந்திருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வரவும், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவுமே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes