General09 September 2026

பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று (9) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உதவிகள் உள்ளிட்ட சிரமமான காலப்பகுதிகளில் இந்தியா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நன்றியைத் தெரிவித்தார். 

அத்துடன், 'ஒபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) ஊடாக இந்தியா மேற்கொண்ட மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

இராஜதந்திர மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளையும் தாண்டி, கலாசார, வரலாற்று மற்றும் மத ரீதியான பிணைப்புகளால் உருவான நீண்டகால நட்புறவாகவே இலங்கை - இந்திய உறவு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும், நாடாளுமன்ற மற்றும் பொதுத்துறைசார் திறன் கட்டமைப்பு, நிறுவனங்களை வலுப்படுத்தல் மற்றும் நல்லாட்சி தொடர்பாகவும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடரவும், மேலும் வலுப்படுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதோடு, சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலதிகமாக, அறிவுப் பரிமாற்றம், புதுமை மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) போன்ற பிரத்தியேக இந்திய நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
Related recommendation
Hiru TV News | Programmes