General12 September 2026

தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!

தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அவதானம் திரும்பியுள்ளது.

இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றே (Marc-André Franche) தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அவர்களின் தந்தை பலத்த காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, நேற்று பாதுக்க, பஹள போபே பகுதியில் கைவிடப்பட்டுக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இருப்பினும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இதேவேளை, இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இலக்கு மாறியே நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் தந்தையின் சகோதரரது வீட்டை இலக்கு வைத்தே அவர்கள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes