General14 September 2026

யுக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகே தொடருந்து மீது ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்

யுக்ரைன் - போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் (Yahodyn) தொடருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் தொடருந்து இயந்திரம் மீது ரஷ்யாவின் ஜெட்-இயக்க ஆளில்லா வானூர்தி (jet-propelled drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (Boris Johnson) மற்றும் ஐரோப்பிய நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த தொடருந்து ஒன்று, அந்தப்பகுதியைக் கடந்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பொரிஸ் ஜோன்சன், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் (Carl Bildt) உள்ளிட்ட தூதரகப் பிரதிநிதிகள் பயணித்த தொடருந்து அட்டவணைக்கு முன்னதாகவே நிலையத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

இந்தநிலையில், குறித்த ஆளில்லா வானூர்தி தாக்குதலின் உண்மையான இலக்கு இந்தத் தூதரக தொடருந்தாகவே இருந்திருக்கக்கூடும் என யுக்ரைனின் தொடருந்து நிறுவனம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes