General17 September 2026

இலங்கைக்கு உதவுவது குடும்ப உறுப்பினருக்கு உதவுவது போன்றது:இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் ஒரு குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் பொறுப்புணர்வைப் போன்றது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றை நினைவுகூர்ந்த தூதர் சந்தோஷ் ஜா, இலங்கைக்கான உதவிகளை இந்தியா ஒரு ஆழமான கடமையாகவும், குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் பொறுப்பாகவுமே கருதுகிறது என்று குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ள புதிய அவசர சிகிச்சை பிரிவு மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு உயர்தர அவசரகால மருத்துவச் சேவைகள் விரைவாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வடக்கு தொடருந்துப் பாதையில் வேகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய 15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நவீன சமிக்ஞை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

'டிட்வா' (Ditwah) புயலால் சேதமடைந்த மத்திய மாகாணத்திற்கான தொடருந்து இணைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சுற்றியுள்ள மூன்று தீவுகளில் கலப்பின புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இது, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பசுமைத் தீவுகள் தொலைநோக்குப் பார்வைக்கு உறுதுணையாக இருக்கும்.

இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்த வான்வழி மற்றும் கடல்சார் பிராந்திய இணைப்புகளை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இந்தியாவின் "விக்சித் பாரத்" என்ற வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான இலங்கையின் மாற்றத்திற்கான பயணமும் இணைந்து இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தும் என உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நம்பிக்கை வெளியிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes