General17 September 2026

பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் தொடருந்து சேவைகள்!

தொடருந்து தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலக தொடருந்துகளும் தற்போது வழமைபோல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு தொடருந்தைத் தவிர ஏனைய அனைத்து தொடருந்து சேவைகளையும் வழமைபோல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து போக்குவரத்து அதிகாரியும் ஊடகப் பேச்சாளருமான அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தொடருந்து பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று 16ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

எனினும், பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே நேற்று பிற்பகல் பல தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான தொடருந்து நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் இணைந்துள்ளதாகவும், சிலர் பணிப்புறக்கணிப்பை முறியடிக்கும் வகையில் செயற்படுவதாகவும் சுமேத சோமரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படவில்லை எனவும், தொடருந்து திணைக்களத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தாலும் அனைத்து தொடருந்து பாதைகளிலும் சேவைகளை வழமைபோல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை கரையோரப் பாதையில் 13 தொடருந்து சேவைகளும், சிலாபம் பாதையில் 11 சேவைகளும், பிரதான மற்றும் வடக்கு தொடருந்து பாதைகளில் 15 சேவைகளும், களனி பள்ளத்தாக்குப் பாதையில் 7 சேவைகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes