Entertainment05 August 2026

'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்க மறுத்தேனா? - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் மறுத்ததாகப் பரவி வரும் தகவல்களுக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் முதற்கட்ட விளம்பரப் பதிவுகள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இருப்பினும், சீதை கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி பொருத்தமாக இல்லை எனச் சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன.

அதேவேளையில், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் 'கே.ஜி.எஃப்' பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவரே அதனை நிராகரித்ததால் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு சென்றதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், இந்த வதந்திகள் குறித்துப் பேசியுள்ள நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி,

சீதையாக நடிக்க எனக்கு முதலில் வாய்ப்பு வந்ததாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

நான் அந்தப் படத்திற்கான தேர்வில் கலந்து கொண்டேன், ஆனால் தேர்வு செய்யப்படவில்லை. என்னால்தான் சாய் பல்லவிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறப்படுவதும் முற்றிலும் தவறான தகவல். இது வெறும் வதந்தி மட்டுமே, எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.


Related recommendation
Hiru TV News | Programmes