Sports30 April 2026

குமார் சங்கக்காரவின் கவனத்தை ஈர்த்த அந்த வீரர் - பஞ்சாப்பை பதறவைத்த ராஜஸ்தான்!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெற்ற அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கார ‘இம்பாக்ட் பிளேயராக’ களமிறங்கிய சுப்ஹம் துபேயை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

223 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு, சுப்ஹம் துபே மற்றும் டொனோவன் பெரேரா ஜோடி 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த தொடரில் தனது முதலாவது தோல்வியைத் தழுவியது.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த குமார் சங்கக்கார,

"ஒரு இம்பாக்ட் பிளேயராக உள்ளே வருவது மிகவும் கடினமான காரியம். ஏனெனில் நீங்கள் விளையாடுவீர்களா இல்லையா என்பதே உங்களுக்குத் தெரியாது. அந்த நிலையில் மனதளவில் தன்னைத் தயார்படுத்தி, இக்கட்டான சூழலில் களமிறங்கி வெற்றியைத் தேடித்தந்த துபேயின் மனவலிமை அபாரமானது."

மேலும், ரியான் பராகின் சிறிய ஆனால் வேகமான இன்னிங்ஸ் ஆட்டத்தின் வேகத்தை மாற்ற உதவியதாகவும், இது ஒரு கூட்டு முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களைப் பெற்றது. மார்கஸ் ஸ்டொயினிஸ் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும், பிரப்சிம்ரன் சிங் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ஓட்டங்களை விளாசி அதிரடி ஆரம்பத்தை வழங்கினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 ஓட்டங்களைக் குவித்தார்.

ராஜஸ்தான் அணியின் துடுப்பாட்ட வரிசை மிகவும் ஆழமானது எனக் குறிப்பிட்ட சங்கக்கார, வைபவ் மட்டுமல்லாது ஜுரேல், ஜெய்ஸ்வால், ஜடேஜா மற்றும் தசுன் ஷானக போன்ற சிறந்த வீரர்கள் அணியில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சுப்ஹம் துபே 31 ஓட்டங்களைப் பெற்று, 19.2 ஓவர்களிலேயே இலக்கை எட்ட உதவினார்.

இதையும் பார்க்க...


Related recommendation
Hiru TV News | Programmes