Sports21 June 2026

11 பந்தில் அரை சதம் விளாசிஉலக சாதனை படைத்த சூர்யவன்ஷி

இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் கடந்து, லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம், கடந்த 2005ஆம் ஆண்டில் இலங்கையின் கௌசல்யா வீரரத்ன 12 பந்துகளில் அரைசதம் கடந்து நிலைநாட்டியிருந்த 21 வருட கால முந்தைய உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து களமிறங்கிய சூர்யவன்ஷி, தான் எதிர்கொண்ட முதல் 11 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்களையும் மற்றும் 5 ஆறு ஓட்டங்களையும் விளாசி அரை சதம் கடந்து இந்த மைல்கல்லை எட்டினார்.

அரைசதத்தைக் கடந்த பின்னரும் அதிரடியைத் தொடர்ந்த அவர், மொத்தமாக 29 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 8 ஆறு ஓட்டங்கள் உட்பட 94 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

சூர்யவன்ஷி மிகக் குறுகிய வித்தியாசத்தில் தனது சதத்தைத் தவறவிட்ட போதிலும், இறுதிப் போட்டியில் இந்திய ஏ அணி வலுவான தொடக்கத்தைப் பெற இவரது ஆட்டம் வழிவகுத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes