Sports10 August 2026

தங்க ராணிகளின் சமர் ( Battle of Golden Queens) முரண்பாட்டுடன் நிறைவு: விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த கல்லூரி

மொரட்டுவை டி சொய்சா மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரன்ஸஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் யசோதரா வித்தியாலயத்துக்கு இடையிலான 3 ஆவது "தங்க ராணிகளின் சமர்"( Battle of Golden Queens) வருடாந்த கிரிக்கெட் போட்டி, 2 ஓட்டங்கள் வித்தியாசத்திலான பரபரப்பான முடிவுக்குப் பின்னர் முரண்பாடுகளுடன் நிறைவடைந்துள்ளது.

போட்டியின் ஏற்பாடுகள் மற்றும் நடுவர் முடிவுகள் தொடர்பில் கவலை வெளியிட்ட யசோதரா வித்தியாலயத்தின்; அதிபர், இனிவரும் காலங்களில் இந்த வருடாந்த கிரிக்கெட் போட்டியில் தங்கள் பாடசாலை பங்கேற்காது என போட்டிக்கு பின்னரான நிகழ்வின் போது பகிரங்கமாக அறிவித்தார்.

நடுவர்கள் மற்றும் போட்டித் தீர்ப்பாளரின் நியமனம் தொடர்பான முரண்பாடுகள், நாணய சுழற்சி நடத்தப்பட்ட முறை மற்றும் போட்டியின் போது வழங்கப்பட்ட நடுவர் தீர்மானம் குறித்தும் அவர் பல கேள்விகளை எழுப்பினார்.

இந்தநிலையில், 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வியைத் தொடர்ந்து, விருது வழங்கும் விழாவின் போது விருதுகளைப் பெற்றுக்கொள்ள யசோதரா வித்யாலய அணியின் வீராங்கனைகள் முன்வரவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பிரின்ஸஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் அதிபர், போட்டி அதிகாரிகளுடனான தொடர்பாடலில் முன்னர் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டபோதிலும், போட்டிக்கு முன்னதாகவே அந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

போட்டி அதிகாரிகளை நியமிக்கும் பாரம்பரிய நடைமுறைப் படியே அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், போட்டிக்கு முன்னர் இது குறித்து யசோதரா வித்யாலயாவிற்கு தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு அதிபர்களுக்கும் இடையிலான இந்த பகிரங்க மோதல் மற்றும் விருது வழங்கும் விழாவில் வீராங்கனைகள் பங்கேற்காதமை சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பாடசாலை விளையாட்டு நிகழ்வொன்றில் இவ்வாறான நடத்தைகள் மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், வெற்றி தோல்விகளை ஏற்கும் விளையாட்டுத் தனத்தை வளர்ப்பதே பாடசாலை விளையாட்டின் நோக்கம் என்றும் பல சமூக வலைத்தளப் பயனர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலும் , பிரின்ஸஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்று போட்டியை விறுவிறுப்பாக முடிவுக்குக் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related recommendation
Hiru TV News | Programmes