International05 June 2026

உலகையே உலுக்கிய புடினின் அதிரடிப் பிரகடனம்!

ரஷ்யாவின் வருடாந்த பொருளாதார மாநாட்டுக்கு அப்பால் சர்வதேச ஊடக ஆசிரியர்களுக்கு நேற்று (04) விசேட செவ்வியளித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதி முன்மொழிவுகள் உதவக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு யுக்ரைனின் கிய்வ் அரசாங்கம் சமரசங்களுக்கு உடன்பட வேண்டும் என்றும், ஆனால் அதற்கான எந்தவொரு அறிகுறியும் யுக்ரைன் தரப்பில் தெரியவில்லை என்பதால், மாபெரும் வெற்றியை எட்டும் வரை ரஷ்யா தொடர்ந்து போரிடத் தயாராக இருப்பதாகவும் அவர் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

தேவையேற்படின் போர்க்களத்திலேயே யுக்ரைனை ரஷ்யா முற்றாகத் தோற்கடிக்கும் என்றும், அதேநேரம் கடந்த ஆண்டு அலாஸ்கா உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ட்ரம்புடன் உடன்பட்ட குறிப்பிட்ட சில சமரசங்களின் அடிப்படையில் இந்தப் போரை இராஜதந்திர ரீதியாக முடிக்க ரஷ்யா தயாராக உள்ளது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் இந்த மிகக் கொடூரமான தரைவழிப் போரை முடிவுக்குக் கொண்டு வர, கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதிகளை யுக்ரைன் முழுமையாகத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனது பிடிவாதமான கோரிக்கையை புடின் கைவிடவில்லை.

தற்போதைய நிலவரப்படி, லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் 100 வீதப் பகுதியையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 85 வீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பையும் ரஷ்யா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மேலும், ரஷ்யாவிடம் யுக்ரைனை விட அதிநவீன ஆயுதங்கள் உள்ளதாகவும், 'ஒரேஷ்னிக்' எனப்படும் அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை நகர்ப்புற இலக்குகள் மீது முழு அளவிலான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த இன்னும் ரஷ்யா முனையவில்லை என்றும், காலம் தங்களுக்குச் சாதகமாக உள்ளதாகவும் புடின் கூறியுள்ளார்.

இறுதியாக, 2030 இல் தனது பதவிக்காலம் முடிந்த பின்னர் தனது அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தனது ஆரோக்கியம் அனைத்தும் கடவுளின் கைகளிலேயே உள்ளது எனக்கூறி அந்தக் கேள்வியை தவிர்த்து விட்டதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
Related recommendation
Hiru TV News | Programmes