General22 June 2026

பின்தொடரும் மர்ம நபர் - சலேவின் மனைவி முறைப்பாடு!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரச் சபையின் தலைவருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்புடையவர் எனத் தோன்றும் சிவில் உடையில் இருந்த நபர் ஒருவர், தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அந்த நபர் தனது மகன் மற்றும் மகளைத் தொடர்ந்து பின்தொடர்வதோடு, அவர்களின் படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் காரணமாகத் தானும் தனது பிள்ளைகளும் பெரும் அச்சத்துக்கும், கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனோரி சலே, இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தலையிட்டு முறையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுரேஷ் சலே தொடர்பில் 'உலகளாவிய இலங்கை மன்றம்' ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் அவரது சுகாதார நிலைமை குறித்து உடனடியாகவும் அவசரமாகவும் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes