General23 June 2026

டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்

தென்மேல் பருவமழை காரணமாக பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாளை மற்றும் நாளை மறுதினம், எதிர்வரும் 26 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த மூன்று நாட்களில் 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த குறுகிய கால டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக, அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முப்படைகளின் தலைமையில் கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும், சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பிரஜா சக்தி மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes