Sports09 June 2026

மீண்டும் சர்ச்சை:பென் ஸ்டொக்ஸ் மற்றும் அட்கின்சனிடம் அதிரடி விசாரணை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அணியின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டொக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோருக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

லோர்ட்ஸ் மைதானத்தில் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களின் பின்னர், திங்கட்கிழமை அதிகாலை வேளையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகியோர் இரவு நேர விடுதி (Nightclub) ஒன்றில் இருந்தபோது அங்கு "சம்பவம் ஒன்று" இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் சபை தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், அந்த சம்பவம் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடாத கிரிக்கெட் சபை, அது குறித்த மேலதிக விபரங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விபரங்கள், இந்த விசாரணைகளின் பின்னர் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்துக்கு வெளியே இவ்வாறான சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவர் ஹரி புரூக் (Harry Brook) இரவு நேர விடுதி காவலாளி ஒருவருடன் மோதலில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரிய அவருக்கு 30,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஏஷஸ் தொடரின் போது இங்கிலாந்து வீரர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, தற்போதைய தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு நேர விடுதிக்கு வெளியே ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்காலிக தடையை எதிர்கொண்டிருந்தார்.

எனினும், பின்னர் நீதிமன்ற விசாரணைகளின் மூலம் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் மீண்டும் ஒரு இரவு நேர விடுதி சர்ச்சையில் சிக்கியுள்ளமை இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes