General26 April 2019

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இன்றும் ஊரடங்கு சட்டம்

இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரையில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு தகவல் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதை நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை , உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்ரிலா விருந்தகத்தில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கண்டியில், சந்தேகத்துக்குரிய மகிழுந்து ஒன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில், குறித்த மகிழுந்தானது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் அக்கரைபற்றுக்கு சென்றதாகவும், எனினும், அன்றைய தினம் அந்த மகிழுந்தை தான் செலுத்தவில்லை என்றும் அதன் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இன்ஷாப் அஹமட்டின் செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர், குறித்த தினத்தில் அந்த மகிழுந்தை செலுத்திச் சென்றிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்தே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் குறித்த மகிழுந்து அக்கரைப்பற்று சென்றமைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த செப்பு தொழிற்சாலையின் முகாமையாளர் உட்பட 9 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினரும், முப்படையினரும் நாடு முழுவதும் விரிவான சோதனைகளை முன்னெடுக்கின்றனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், காவல்துறையினரின் கட்டளையை மீறி பயணித்த சிற்றுர்ந்து ஒன்று தங்காலை நகரில் வைத்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சிற்றுர்ந்தில் இருந்த பெண் ஒருவர் மற்றும் ஆண்கள் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாங்கள், கல்முனையிலிருந்து அளுத்கம தர்கா நகருக்கு செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes