General30 April 2026

அணு ஆயுதம் இல்லையென்றால் மட்டுமே ஒப்பந்தம் : ஈரானுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி நிபந்தனை

பாகிஸ்தானுக்குச் சென்று நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பதிலாக, தற்போது தொலைபேசி ஊடாகவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் ஒரு காகிதத்தைப் பார்ப்பதற்காக 18 மணிநேரம் வானூர்தியில் பறப்பது தேவையற்றது என தெரிவித்த அவர், தொலைபேசி வழியாகவே பேசி வருவது, மிகவும் வசதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நீண்ட தூரம் கடந்து வந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவைத் தருமா? என்பதே தற்போதைய கேள்வி எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

'பொறுமை இழந்து வருவதாக' ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ள சூழலில், ட்ரம்ப்பின் இந்தத் தகவல் அமைதிக்கான ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

அத்துடன் "அவர்கள் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் வரை, எந்தவித உடன்படிக்கையும் எட்டப்படாது" என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

ஆனால், தற்போது நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர தொடர்புகள் தொலைபேசி வாயிலாகவே தொடர்கின்றன.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்தத் தொலைபேசி உரையாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

முன்னதாக, 2015 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பதிலாக, புதிய மற்றும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes