General07 May 2026

118 உறுப்பினர்களின் ஆதரவின்றிப் பதவியேற்பு இல்லை: விஜய்க்கு ஆளுநர் திட்டவட்டமான பதில்

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தவெக தலைவர் விஜயைப் பதவியேற்குமாறு அழைக்க ஆளுநர் ஆர்லேகர் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி நேற்று ஆளுநரைச் சந்தித்த விஜய், இன்று மீண்டும் ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களுடன் சேர்த்து மொத்தம் 113 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக விஜய் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

எனினும், விஜய்க்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனத் தெரியவருகிறது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்திருந்தாலும், தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாமல் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் ஆர்லேகர் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஆளுநரின் இந்த நிலைப்பாட்டினால், விஜயின் பதவியேற்பு நிகழ்வு மேலும் தாமதமடைந்துள்ளது. எஞ்சியுள்ள 5 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகத் தவெக தரப்பு ஏனைய கட்சிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

அதேவேளை, ஆளுநரின் இந்தத் தாமதம் மற்றும் நிபந்தனைகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் நீடித்து வரும் இந்த இழுபறி நிலையால் அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.



Related recommendation
Hiru TV News | Programmes