General10 June 2026

உலக அமைதிச் சுட்டெண் 2026: தெற்காசியாவில் இலங்கை மிகப்பெரிய முன்னேற்றம்

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனம் (IEP) அதன் 20ஆவது வருடாந்த 'உலக அமைதிச் சுட்டெண்' 2026 அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதித் தன்மையில் மிகப்பெரிய சதவீத முன்னேற்றத்தை இலங்கை பதிவு செய்துள்ளது.

இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டுக்கான உலக அமைதிச் சுட்டெண்ணில் 163 நாடுகளுக்கு மத்தியில் 97ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 30 இடங்கள் முன்னேறி உலகளவில் 67ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன் மூலம், தெற்காசிய பிராந்தியத்தில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிஅமைதியான நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஒட்டுமொத்த அமைதி நிலைமை 2.3 சதவீதம் முன்னேற்றமடைந்துள்ளது.

இந்த நேர்மறையான வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இராணுவமயமாக்கல் தணிப்பு துறையில் 6.4 சதவீத குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐநாவின் அமைதிப்படைக்கான நிதியுதவி குறிகாட்டியில் 40.8 சதவீத பாரிய வளர்ச்சி பதிவாகியுள்ளது.

அரசியல் ஸ்திரமின்மை 25 சதவீதம் குறைந்ததன் பின்னணியில், இந்தத் துறையில் 1.8 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த நேர்மறையான நகர்வுக்கு நேர்மாறாக, உலகளாவிய அமைதி நிலைமையானது சராசரியாக 0.7 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

உலகளவில் அமைதித் தன்மை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் 12ஆவது தொடர்ச்சியான ஆண்டு இதுவாகும்.

உலக அமைதிச் சுட்டெண் முதன்முதலில் வெளியிடப்பட்ட 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 119 நாடுகள் தங்களது அமைதி நிலையை இழந்துள்ளன.

இதற்கு முக்கிய காரணமாக உலகளாவிய மோதல்களே அமைந்துள்ளன.

கடந்த ஆண்டில் மட்டும் 99 நாடுகளில் அமைதி நிலை மோசமடைந்துள்ளதுடன், வெறும் 62 நாடுகள் மாத்திரமே தங்களது அமைதித் தன்மையில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes