General13 June 2026

பயங்கரவாதத் தடைச் சட்டம்: 'நிரபராதிகளின் ஆயுட்காலம் சிறையிலேயே முடிகிறது' என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சாடல்

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த சட்டத்தினால் நிரபராதிகளின் ஆயுட்காலமும் கூட சிறையிலேயே முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கான விசாரணைக் காலம், சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் காலம் மற்றும் நீதிமன்ற விசாரணை முடிவடையும் காலம் ஆகியவற்றிற்கு எந்தவொரு சட்டபூர்வ காலவரையறையும் இல்லை.

பாதுகாப்பு அமைச்சரின் (ஜனாதிபதி) அனுமதியுடன், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை காவல்துறையினரின் அறிக்கையின் அடிப்படையில் ஒருவரை 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும். இதனை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது.

இந்தச் சட்ட வழக்குகளில் 95 சதவீதமானவை சித்திரவதைகள் மூலம் பெறப்படும் 'சுய ஒப்புதல் வாக்குமூலங்களை' அடிப்படையாகக் கொண்டவை. இதனைத் தடுக்க, கைது செய்யப்பட்ட 10 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுக்களைத் தாக்கல் செய்து தாம் பல வழக்குகளை விரைவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இளைஞர்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள், வங்கி முகாமையாளர்கள் எனப் பலரும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.

தாம் வாதாடிய வழக்குகளில் பலர் 15 முதல் 18 ஆண்டுகள் வரை சிறையிலிருந்துவிட்டு இறுதியில் 'நிரபராதிகள்' என விடுதலையாகியுள்ளனர். 22 வருடங்களாக இன்னும் சிறையில் இருக்கும் கைதிகளும் உள்ளனர்.

இறுதியில் அவர்கள் விடுதலையானாலும், ஒரு நிரபராதியின் ஒட்டுமொத்த ஆயுட்காலமும் சிறையிலேயே வீணடிக்கப்பட்டு விடுகிறது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கவலை வெளியிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes