General13 June 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்ட திருத்தத்தால் 100 வரையான கைதிகளுக்கு பிணை: 'சூரியனின் விழுதுகளில்' சட்டத்தரணி தவராசா விபரிப்பு!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சாதகமான திருத்தங்கள் காரணமாக, சுமார் 75 முதல் 100 வரையான கைதிகள் பிணையில் செல்ல முடிந்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.

'சூரியனின் விழுதுகள்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கப் பிரதான சட்டத்தின் கீழ், நீண்டகாலமாக பிணை வழங்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கவில்லை.

சட்டமா அதிபரின் (நிர்வாகத்துறை) சம்மதம் இருந்தால் மட்டுமே பிணை வழங்க முடியும் என்ற நிலை காணப்பட்டது. இதுவே கைதிகள் பல வருடங்களாகச் சிறைகளில் வாடுவதற்குப் பிரதான காரணமாக அமைந்தது.

எனினும், 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் மூலம் இந்த அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கும், மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்டது.

முன்னர் 18 மாதங்களாகக் காணப்பட்ட தடுத்து வைக்கும் கால எல்லை, இத்திருத்தத்தின் மூலம் 12 மாதங்களாகக் (ஒரு வருடம்) குறைக்கப்பட்டது.

ஒருவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர் பிணை கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், ஒரு வருடக் காலத்திற்குள் விசாரணை நடத்தப்படாமல் தாமதமாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றமே பிணை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டால், வழக்கை இழுத்தடிக்காமல் ஒவ்வொரு நாளும் (Day-to-day) விசாரணை நடத்தி துரிதமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இந்தச் சட்டத்திருத்தம் குறித்துப் பேசிய சட்டத்தரணி தவராசா, "இது முழுமையான ஒரு நல்ல சட்டம் என்று நான் கூற வரவில்லை, ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிணை வாய்ப்பை வழங்கும் ஒரு நல்ல திருத்தச் சட்டம்.

இதன் காரணமாகவே இந்தச் சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என தான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டேன்" என மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation

"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி...
Read more
Hiru TV News | Programmes