General23 June 2026

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!

அரசியல் அதிகாரம் மற்றும் செல்வாக்குகளைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் கடற்கரையோரக் கட்டுமானங்களைத் தடுத்து, மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்கான பல அதிரடி நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்குத் துரிதமான மற்றும் நிரந்தரமான தீர்வுகளைக் கண்டறியும் நோக்கில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள விசேட யோசனைகளுக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அமைச்சரவை தீர்மானத்தின்படி, கிழக்கு மாகாணத்தில் பின்வரும் பாரதூரமான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரசியல் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பலவந்தமாகக் காணிகளைக் கையகப்படுத்தல், சட்டவிரோதமாகக் காணிகளை நிரப்புதல் மற்றும் கடலோரங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொள்ளல்.

இவ்வாறான மனிதச் செயற்பாடுகளால் இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த கிழக்கு மாகாணக் கடற்கரையோரத்திலும் மோசமான கடலரிப்பு அதிகரித்து வருகின்றது.

சிவில் யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்திருப்பினும், இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக மீளக்குடியமர்த்துவதில் முறையான வேலைத்திட்டம் எதுவும் அமுல்படுத்தப்படாமை.

நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் போது முறையான அளவுகோல்களைக் கடைப்பிடிக்காமையினால், மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் நேரடியான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளமை.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த பின்வரும் யோசனைகளை உடனடியாக அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது:

‘கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல்’ எனும் பெயரில் புதிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. தென்மாகாண முன்னாள் காணி ஆணையாளரும், தற்போதைய தென்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பல்லியகுருகே தலைமையில், தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி இக்குழு செயல்படும்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் காணி நிரப்புதல்களை உடனடியாக நிறுத்துவதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட அலகொன்று உடனடியாக நிறுவப்படும். இதற்கென பாதுகாப்புப் பிரிவினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாவலி அதிகாரசபையால் 05 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு முன்னர் வர்த்தகப் பெறுமதியுடன் வழங்கப்பட்டு, இதுவரை எவ்வித திட்டங்களும் ஆரம்பிக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள காணிகள் உடனடியாக அரசாங்கத்தினால் மீளப்பெறப்படும்.

அவ்வாறு மீளப்பெறப்படும் காணிகள் அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, முறையான வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்.

கிழக்குக் கரையோரங்களில் உள்ள உச்ச ஆற்றல்வளங்களைப் பயன்படுத்தி, கடலோரச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான துரித திட்டம் தயாரிக்கப்படும்.

கிழக்குக் கரையோரப் பகுதிகளில் விருந்தகங்களை நடத்திச் செல்வோர் மீது, அரச ஊழியர்கள் பக்கச்சார்பின்றியும் வெளிப்படைத்தன்மையுடனும் சட்டத்தை அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்கான விசேட பொறிமுறை ஒன்று தயாரிக்கப்படும்.
Related recommendation
Hiru TV News | Programmes