General02 July 2026

யாழ். மாநகர சபை புதிய கட்டடப் பணிகளுக்காக சுமார் ரூ. 1,958 மில்லியன் - அமைச்சரவை அனுமதி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதியின் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்காக, வரி நீங்கலாக 1,958.85 மில்லியன் ரூபாய் திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த இரண்டாம் கட்டப் பணிகளில் கட்டடத்துக்கான குளிரூட்டி (Air-conditioning) அமைப்பை நிறுவுதலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, திட்டத்தின் அசல் ஒப்பந்த நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு எஞ்சிய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டு, அதே ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டளவில் இந்த கட்டடத்தின் சுமார் 70% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தன.

எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையினால், அசல் ஒப்பந்தக் காலத்துக்குள் பணிகளை முழுமையாக முடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில், இந்த இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் கட்டடத்தை முழுமையாகப் பொறுப்பேற்க யாழ்ப்பாணம் மாநகர சபை சம்மதம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes