General08 July 2026

அர்ஜென்டினாவிடம் எகிப்து தோல்வி: நடுவர்கள் மீது பயிற்சியாளர் குற்றச்சாட்டு

கால்பந்து தொடரின் 16 அணிகளுக்கான சுற்றில், அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தத் தோல்விக்குப் பின்னர் எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹொசம் ஹசன், போட்டியின் நடுவர்கள் தனது அணியை ஏமாற்றிவிட்டதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்டத்தில் எகிப்து அணி ஆரம்பத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இருப்பினும், போட்டியின் இறுதிக்கட்டத்தில் அர்ஜென்டினா அணி மூன்று கோல்களை அடித்து அபார வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

போட்டியின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய பயிற்சியாளர் ஹொசம் ஹசன், நடுவர்களின் பாரபட்சமான முடிவுகளே தோல்விக்குக் காரணம் என்று தெரிவித்தார்.

எகிப்து அணி அடித்த கோல் ஒன்று VAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கப்பட்டதை அவர் கடுமையாக விமர்சித்தார்.

அர்ஜென்டினாவின் வெற்றி கோலுக்கு முன்னதாக, எகிப்து வீரர் ஒருவரின் சட்டையைப் பிடித்து இழுத்தமைக்குத் தங்களுக்குப் பெனால்டி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதை நடுவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

"நடப்பு கால்பந்து செம்பியனான அர்ஜென்டினா அணியும், மெஸ்ஸியும் தொடர்ந்து தொடரில் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடுவர்கள் செயல்பட்டிருக்கலாம்" என அவர் சந்தேகம் எழுப்பினார்.

மேலும், எகிப்து அணி தனது முந்தைய போட்டி முடிந்து வெறும் நான்கு நாட்களிலேயே நண்பகல் வேளையில் இந்தப் போட்டியில் விளையாட வேண்டியிருந்தது என்றும், இந்த அட்டவணை வீரர்களுக்கு அநீதி இழைப்பதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes