General09 July 2026

சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே அரசின் இலக்கு: ஜனாதிபதி

இலங்கையின் சுகாதார சேவையை வெறும் திருத்தங்களுக்கு அப்பால் சென்று, சர்வதேச தரத்திலான உயர்தர சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், ஆரோக்கிய சுகாதார நிலையங்களை அமைப்பதன் மூலம் பிராந்திய சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச மருத்துவமனைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், பொதுமக்கள் குறைந்த செலவில் திறமையான மற்றும் தரமான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும்.

இதன் மூலம் தனியார் துறையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு சுமை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கடந்த அரசாங்கங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த மொனராகலை மாவட்ட மருத்துவமனையின் கட்டடத் தொகுதி, திருகோணமலை, அம்பாறை மற்றும் சிலாபம் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட 26 பெரும் கட்டுமான திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 48 கட்டுமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும், சுவசரிய சேவையை வலுப்படுத்துவதுடன், இனிவரும் காலங்களில் சர்வதேச தரத்திலான, நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நோயாளர் காவு வாகனங்களை மட்டுமே கொள்வனவு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள், பாடசாலை ஊடகக் கழகங்களை உருவாக்குதல் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்களும் அரசாங்கத்துடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய விசேட ஊடக மத்திய நிலையத்தை உருவாக்குதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், அஞ்சல் மற்றும் அரச அச்சகத் திணைக்களங்களை நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes