General15 July 2026

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் பதவி விலகல்

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று அனுப்பப்பட்ட அந்த பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும், ஜனாதிபதி அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் பதவி விலகல் செய்ய எடுத்த தீர்மானம் தனிப்பட்ட காரணங்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடந்த காலத்தில் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாகியுள்ளது.

அந்தப் பதவியை வகித்த மஞ்சுளா மதஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes