International15 July 2026

கனேடிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் காவல்துறை அதிரடி : வீட்டில் சிக்கிய திடுக்கிடும் பொருட்கள்!

கனடாவின் மனிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கி மார்க் (78) என்பவரின் வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பெருமளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.பி.சி ஊடக செய்திகளின் படி, பல அரசியல் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த இங்கி மார்க், பின்னர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.

ஜூலை 7ஆம் திகதி அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் சில கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனுடன், ஆயிரக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 300,000 கனேடிய டொலர்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கி மார்க் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், எதிர்வரும் ஒகஸ்ட் 11ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes