General28 July 2026

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வு வயது வரம்பை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயமாக அவசியமான விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் தெளிவாக சில பிரிவுகளை உள்ளடக்கியிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, அரசியலமைப்பின் 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 30(2) மற்றும் 62(2) ஆகிய பிரிவுகளுக்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார்.

எனினும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கோ அல்லது நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அரசியலமைப்பின் எந்தப் பிரிவிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes