General04 August 2026

இலங்கையின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: இந்தியாவின் மெலத்தியன் மருந்து கையளிப்பு!

இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா வழங்கிய 'மெத்தியன்' (Technical Malathion) பூச்சிக்கொல்லி மருந்துத் தொகுதி, சுகாதார அமைச்சிடம் இன்று (4) உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இந்த மருந்துத் தொகுதியை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மெலத்தியன் மருந்தினை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இந்திய உயர்ஸ்தானிகருக்கு சுகாதார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இத்தகைய 'தொழில்நுட்ப மாலத்தியான்' மருந்து பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர கருத்துத் தெரிவிக்கையில், "தற்போது டெங்கு பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்த மெலத்தியன் மருந்துத் தொகுதி, டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் உதவியாகவும் அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பும் ஆர்வமும் எப்போதும் இல்லாதவாறு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes