General09 August 2026

சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? - நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் குறித்து நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் எழுந்துள்ளது.

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், புதிய கடவுச்சீட்டின் தரம் காரணமாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த கடவுச்சீட்டை சரியாக ஸ்கேன் செய்து படிக்க முடியாததால், அது போலியானது என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடவுச்சீட்டு கட்டணம் 6,000 ரூபாயாக தொடரும் அதே வேளையில், இலங்கை கடவுச்சீட்டுகளில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64இலிருந்து 48ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.

புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லை என்றும், அச்சுத் தரமும் மிகக் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் குடிவரவு முத்திரைகள் மறுபக்கத்தில் கசிவது போன்ற பிரச்சினைகள் காரணமாக சில நாடுகள் அந்த கடவுச்சீட்டுகளை நிராகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரக்குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது சர்வதேச தரங்களுக்கு இணங்கவே உள்ளது என்றும், இது பல நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை என்றும் அவர் கூறினார்.

5 மில்லியன் கடவுச்சீட்டுகளைக் கொள்முதல் செய்வதற்கான விலைமனு கோரல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதாகவும், மின்னணு கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
Related recommendation
Hiru TV News | Programmes