General10 August 2026

கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களான “இரத்மலானை சைமா” உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கஞ்சிப்பானை இம்ரானின் சகாக்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் தலைமையில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை ஊடாக இவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், தேடப்பட்டு வரும் கஞ்சிப்பானை இம்ரானின் பிரதான சகாக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவரான இரத்மலானை சைமா என்பவருக்கு எதிராக சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் விசேட பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இந்த 3 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கஞ்சிப்பானை இம்ரானை கைதுசெய்யும் நோக்கில் உதவி காவல்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவிற்கு சென்ற போதிலும் குறித்த நடவடிக்கையைக் கைவிட்டு இலங்கைக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், மலேசிய காவல்துறையினரும், சர்வதேச காவல்துறையினரும் இணைந்து, கஞ்சிப்பானை இம்ரானை கைது செய்வதற்கான சோதனைகளை மலேசியாவில் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes