General10 August 2026

தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!

போதைப்பொருள் குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4,962 கைதிகளில் 1,506 பேருக்கு தற்போது புனர்வாழ்வுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தின் போதே அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிறைச்சாலைகள் திணைக்களம், சமூக அடிப்படையிலான சீர்திருத்தங்கள் திணைக்களம், புனர்வாழ்வு பணியகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் புனர்வாழ்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளுக்கும், தாமாக முன்வந்து புனர்வாழ்வைப் பெற விரும்பும் கைதிகளுக்கும் இந்தத் திட்டங்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வெவ்வேறு குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்து வரும் அனைத்துக் கைதிகளுக்கும் தற்போது புனர்வாழ்வு வாய்ப்புகளை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.

இதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காகத் தேவையான பணியாளர்களை நியமிக்கவும், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் புனர்வாழ்வுத் திட்டங்களைப் பலப்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், புனர்வாழ்வு பெற்ற நபர்களுக்கான சமூக அங்கீகாரம் மற்றும் நற்சான்றிதழ்களைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

புனர்வாழ்வுச் செயற்பாடுகளை மேலும் பயனுள்ளதாக்கவும், புனர்வாழ்வு பெற்ற நபர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதை இலகுபடுத்தவும் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
Related recommendation
Hiru TV News | Programmes