General12 August 2026

நீதிபதிகளின் ஓய்வு வயது திருத்தம் குறித்து கவலை: இலங்கைக்கு கடும் எச்சரிக்கையுடன் ஐநா கடிதம்!

இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் காணப்படுகிறது. புதிய திருத்தத்தின் மூலம் இதனை முறையே 67 மற்றும் 65 ஆக உயர்த்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அவசர அரசியலமைப்புத் திருத்தமானது நீதிமன்ற அமைப்பின் சுதந்திரத்துக்கும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கான உரிமைக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா விசேட பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, இந்த மாற்றங்கள் எதிர்கால நியமனங்களுக்கு மட்டுமன்றி, தற்போது சேவையிலுள்ள நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை பெரும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறையான கலந்தாலோசனைகள் இன்றி கொண்டுவரப்படும் இத்தகைய திருத்தங்கள், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த சட்டத்திருத்தத்துக்கான காரணங்கள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes