General14 August 2026

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, சுமார் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு, உடல் சோர்வு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

இதனால், பகல் நேரங்களில் வெளிப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான உடல் உழைப்பு நடவடிக்கைகளை முடிந்தவரை மட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், உடலில் நீரிழப்பு ஏற்படாத வகையில் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக வெப்பநிலை தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரியவும், பொதுமக்கள் தமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் அதிக வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்துகின்றனர்.

எனவே, இன்றைய தினம் அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், போதுமான அளவு தண்ணீர் அருந்தி, தேவையற்ற வெயில் பயணங்களை தவிர்த்து, அதிக வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes