International17 August 2026

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லமாட்டார்: பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாட்டுக்குத் திருப்பி ஒப்படைக்கும் வரை, பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ள மாட்டார் என பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றுள்ள ஹசீனாவுக்கு பங்களாதேஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் திரும்ப ஒப்படைக்குமாறு டாக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எதிர்வரும் வாரம் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லக்கூடும் என வெளியாகும் ஊடகச் செய்திகள் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஏ.கே.எம். ஷாஹிதுல் கரீம், இத்தகைய விஜயத்திற்குப் பொருத்தமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

இதற்காக, ஷேக் ஹசீனா மற்றும் ஏனைய குற்றவாளிகளை விரைவாக நாடுகடத்துமாறு இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் இருந்தவாறு ஹசீனா ஊடகங்களுக்கு அளித்து வரும் பகிரங்கப் பேட்டிகள் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைச் சூழலைப் பாதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

கடந்த பெப்ரவரி மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற தாரிக் ரஹ்மான், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் செல்லாமல் மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

இதேவேளை, பங்களாதேஷ் சமர்ப்பித்துள்ள நாடுகடத்தல் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes