International22 August 2026

நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் ‘சிவப்பு பிடியாணை’ வெளியிடக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முயன்ற செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான உள்நாட்டு குற்றவியல் வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கி நீதியமைச்சர் அகின் குர்லெக், நெதன்யாகு உள்ளிட்ட இருவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களாக அறிவிக்கும் வகையில் இன்டர்போல் சிவப்பு பிடியாணை விடுக்கக் கோரி உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் மொத்தம் 35 பேருக்கு எதிராக உயிரிழப்புகளை ஏற்படுத்துதல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முயன்ற Global Sumud Flotilla எனப்படும் கப்பல் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், துருக்கியின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் இந்த முயற்சி பயனற்றது என நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes